எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டுகிறார் மு.க.ஸ்டாலின்… புகழாரம் சூட்டும் செந்தில் பாலாஜி!!

Published : Dec 06, 2021, 09:16 PM IST
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டுகிறார் மு.க.ஸ்டாலின்… புகழாரம் சூட்டும் செந்தில் பாலாஜி!!

சுருக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டு, 319 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 156 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 95 குடும்பங்களுக்கு இலவச அடுப்புடன் கூடிய எரிவாயு இணைப்பு, 142 குடும்பங்களுக்கு அத்தியவசிய சமையல் பாத்திரங்கள் மற்றும் ஆடைகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை பொருத்தவரை அனைவருக்கும் சமமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்ற முதல் நிதியாண்டில் முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு தடுப்பணைகள், அரசு வேளாண் கல்லூரி, சிப்காட் தொழிற்சாலைகள் என பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளார். கடந்த காலங்களில் மின் மிகை மாநிலம் என்று சொல்லிக்கொண்டு தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்பு கேட்டு 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்த சூழல் இருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முதல்வர் வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் பல்வேறு சேவைகள் மாவட்ட நிர்வாகத்தால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கி அதன் மூலம் அடையாள அட்டை உதவித்தொகை வேலைவாய்ப்பு உள்ளிட்ட அவர்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் முதல்வர் அவர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் பல்வேறு தொழில் செய்வதற்காக வாங்கிய ரூ. 2800 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். யாருக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை அனைத்தையும் கோரிக்கையாக வழங்கினால் அதை அரசிடம் எடுத்துச் சொல்லி அதற்கான நிதி ஆதாரத்தை பெற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கப்படும். அந்த வகையில்தான் முதல்வரின் அரசு செயல்பட்டு கொண்டு உள்ளது. நூற்றாண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. குளித்தலை காவிரி ஆற்றுப் பகுதியில் ரூ.750 கோடி மதிப்பில் கதவணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நெரூர் பகுதியில் ரூ.700 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட உள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுவதும் 6 தடுப்பணைகள் அறிவிக்கப்பட்டது. அதில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு தடுப்பணைகள் பெறப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!