‘மோடி அரசின் மீதான அதிருப்தியை......திசை திருப்பவே பா.ஜ.க.யாத்திரை’
சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு...
மோடி அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்களின் அதிருப்தியை திசைதிருப்பவே பாரதிய ஜனதா கட்சி யாத்திரை நடத்துகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கேரள அரசுக்கு எதிராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா யாத்திரை நடத்தினார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நடத்தப்படும் 15 நாள் யாத்திரையை ஒட்டி டெல்லியில் இந்த யாத்திரையை பா.ஜ.க. நடத்தியது.
இந்த யாத்திரை மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.,
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கூறியதாவது-
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் பா.ஜ.க. நடத்திய போராட்டம் படு தோல்வி அடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே கண்டிராத ஒரு நிகழ்ச்சியாகும்.
இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பாசிச போக்கே காரணம். கேரளாவில் அரசியல் வன்முறையை தொடங்கியதே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புக்கள் தான்.
கேரளாவில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தொடங்கிவைத்த பா.ஜ.க. யாத்திரைக்கு பொதுமக்களிடையே ஆதரவு இல்லாததால் அவர் டெல்லிக்கு ஓடிவந்து விட்டார். இங்கு அவர் தொடங்கிவைத்த யாத்திரையும் படுதோல்வி அடைந்துள்ளது. அவரே டெல்லி யாத்திரையின் முடிவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்வில்லை.
மோடி அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்களின் அதிருப்தியை திசைதிருப்பவே இந்த யாத்திரையை நடத்துகின்றனர். பாரதிய ஜனதா கட்சி தேர்தலின் போது கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.
வன்முறையும் வகுப்பு ரீதியில் மக்களை பிளவுபடுத்துதலும் இன்றி பாரதிய ஜனதா கட்சி தனது அடித்தளத்தை விரிவுபடுத்த முடியாது. வகுப்பு ரீதியில் பிளவுபடுத்தும் பா.ஜ.க.அரசியல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டது.
தனியார் ராணுவமான பசு பாதுகாவலர்கள் கும்பல் தலித்துகள் , முஸ்லிம்களை அடித்து தாக்குதல் நடத்துவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம். ஜனநாயக வழியில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.