கீழடியில் 4 ஆம்  கட்ட   அகழாராய்ச்சிப் பணிகள்  தொடரும் !!  சமாளிக்கும்  அமைச்சர்  மாபா.பாண்டியராஜன் !!!

First Published Oct 9, 2017, 12:11 PM IST
Highlights
Keeladi ... Minister pandiyarajan press meet


சிவகங்கை மாவட்டம் கீழடியில்  ஆய்வுப் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், 4 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்  விரைவில் தொடரும் என்று அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2300 ஆணடுகள் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பள்ளிச் சந்தை புதூர் பகுதியில் தென்னந்தோப்புக்குள் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த கடந்த 2015 மார்ச் முதல் செப்டம்பர் வரை நடைபெற்றன. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில், பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள், ரோமானிய மண் பாண்டப் பொருள்கள், வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததற்கான அணிகலன்கள் உள்பட சுமார் 5,300 பொருள்கள் கிடைத்தன.
இரண்டாம் கட்டப் பணிகள் 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடைபெற்றன.

2-ஆம் கட்ட பணிகள் முடிந்த பின்னர், அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், அகழாய்வில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, ஸ்ரீ ராமன் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில்,  மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமன், துணை கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால் தற்போது  3 ஆம் கட்ட ஆய்வுப் பணிகள்  முடிக்கப்பட்டு, அதற்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது  மூடப்பட்டு வருகின்றன. மேலும்  அங்கிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதனால் இத்துடன்  இந்த ஆராய்ச்சிப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டதாக  சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி  அமைச்சர் மாபா.பாண்டியராஜன், கீழடியில்  ஆய்வுப் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், 4 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்  விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

ஆய்வு  பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்ட்டு வருவதாகவும், தற்போது மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்ப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மீண்டும் ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்தார்.

 

click me!