10 லட்சம் தமிழர்களை அகதிகளாக அலையவிட்டது போதாதா..?? டி.ஆர் பாலுவுக்கு எதிராக குமுறி வெடிக்கும் சீமான்..!!

Published : Nov 21, 2019, 11:47 AM IST
10 லட்சம் தமிழர்களை அகதிகளாக அலையவிட்டது போதாதா..?? டி.ஆர் பாலுவுக்கு எதிராக குமுறி வெடிக்கும் சீமான்..!!

சுருக்கம்

உலகம் முழுவதும் 10 இலட்சம் தமிழர்களை நாடற்ற அகதிகளாக அலையவிட்டு, எமது தாயகத்தைச் சிதைத்து அழித்த நயவஞ்சகச் செயலைச் செய்து முடித்த திமுக – காங்கிரசின் இனத்துரோகம் இன்றும் எங்கள் நெஞ்சில் ரணமாய் உறுத்திக் கொண்டிருக்க, அழித்தொழிக்கப்பட்ட எம்மின மக்களுக்கு நீதிகேட்டு ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்!

காங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக, தனது அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர்கள்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், இவ்வாறு பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு. சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது. விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். 

அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் 'புலிகளால் ஆபத்து' என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது. 

கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தனிமனித மரணத்தைக் காரணம் காட்டி, ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, உலகம் முழுவதும் 10 இலட்சம் தமிழர்களை நாடற்ற அகதிகளாக அலையவிட்டு, எமது தாயகத்தைச் சிதைத்து அழித்த நயவஞ்சகச் செயலைச் செய்து முடித்த திமுக – காங்கிரசின் இனத்துரோகம் இன்றும் எங்கள் நெஞ்சில் ரணமாய் உறுத்திக் கொண்டிருக்க, அழித்தொழிக்கப்பட்ட எம்மின மக்களுக்கு நீதிகேட்டு ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்! 

 

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்