
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்தது.
சென்னை, எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் புகார் கொடுத்தவர்கள் யார் என்ற லிஸ்டை தெரிவித்தால் பதிலளிப்பேன் என சசிகலா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லிஸ்டை கொடுக்க தயார் என விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிகிச்சையின் போது யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்ற லிஸ்டை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.