யார ஏமாத்த பாக்கறீங்க...! எங்கள் கோரிக்கைகள் எங்கே? போராட்டத்தை கைவிடாத தொழிற்சங்கங்கள்!

First Published Jan 10, 2018, 3:07 PM IST
Highlights
Workers unions announced bus strike will continue


போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்காமல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும் என்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் சிஐடியூவின் தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். நேற்று, குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 

இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

7 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் எனவும், அந்த தொகை பொங்கலுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். மேலும், தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் கூறி வருகிறது.

இது குறித்து சிஐடியூவின் பொது செயலாளர் சண்முகம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிற துறையில் உள்ளவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுதி வருகிறோம். மின்சார வாரியம், ஆவின் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2.57 சதவீதம் கொண்டு பெருக்கி வரும் தொகை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கிவிட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமையைக் காட்டுகிறது. அதனால வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

சிஐடியூவின் தலைவர் சௌந்தரராஜன், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும் என்று கூறினார். இதனை ஏற்க இயலாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் சௌந்தரராஜன் கூறினார்.

click me!