சுத்து போட்டு அதிமுக முக்கிய நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு! கூலிப்படை வெறிச்செயல்.. வெளியான பகீர் காரணம்

By vinoth kumarFirst Published Sep 22, 2022, 9:57 AM IST
Highlights

பட்டப்பகலில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டுவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டுவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். இவர் ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கட்டுமான தொழில் செய்து வந்தார். அப்போது அவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறியுள்ளார். இந்நிலையில், செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகே மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

click me!