“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

By Raghupati RFirst Published Oct 2, 2022, 7:07 PM IST
Highlights

தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.

இதனால் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இன்று மூன்றாவது நாளாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. 'இதையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘எனது மகன் சங்கரைச் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

ஆனால் இதுவரை அதுகுறித்து எனக்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. என்னுடைய வயோதிக காலத்தில் எனக்கு உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் எனது மகன் சங்கரைக் கடலூர் சிறைக்குச் சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளேன். எனது மகன் சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும்போது அவர் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இப்பொழுது மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி எனது மகனை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதையும் ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொண்டேன்.  இது குறித்து இன்றுவரை எனக்கோ எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ மேற்கண்ட எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இது குறித்து சங்கருக்குக் கொடுக்கப்பட்ட நோட்டீசை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி கடலூர் சிறை அதிகாரி எனது மகன் சங்கரை ஒரு மாதகாலம் யாரும் சந்திக்க முடியாதவகையில் தடை விதித்திருப்பதாக அறிந்தேன்.

எனது மகனிடம் எந்தவிதமான சட்ட உதவிகளைக் கூட நாட முடியாத ஒரு சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணிநீக்கம் தொடர்பான நோட்டீசை வழங்க முயற்சி செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது மகன் சங்கர் பல அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டு சமூகம், அரசியல், ஊழல் தொடர்பான பல்வேறு கருத்துகளைப் பேசி வந்துள்ளார். எனது மகன் சங்கர் வெளியிடக்கூடிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதாலும் அவருக்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதாலும் சங்கரைப் பழிவாங்க வேண்டும் என்று பலர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதை ஒரு தாயாக நான் அறிவேன்.

இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

கடந்த காலங்களில் சங்கரைப் பல பொய் வழக்குகளில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியதும், தொடர்ந்து சங்கர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகள் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய தண்டனையும், அந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்காத வகையிலும் சட்ட உதவிகளை நாட முடியாத ஒரு சூழலை உருவாகியுள்ளது.

ஒரு தாயாக நான் கூட சந்திக்க முடியாத சூழ்நிலையில் எனது மகன் தள்ளப்பட்டுள்ளார். எனது மகன் சங்கர் சமீப காலமாக திமுக அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும், திமுக குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எனது மகன் சவுக்கு சங்கர் தொடர்ந்து பேசி வந்தார். இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தற்போதைய திமுக அரசாங்கம் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் எனது மகன் சவுக்கு சங்கரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக அரசாங்கம் எனது மகன் சவுக்கு சங்கரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழிவாங்கும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

click me!