"யாராலும் என்னை விரட்ட முடியாது.." எடப்பாடி கோட்டைக்குள் ‘பீஸ்ட்’ மோடில் சசிகலா.!!

By Raghupati RFirst Published Apr 12, 2022, 3:03 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இம்மாதம் 8ம் தேதி, தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. 

ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.  இன்று சேலத்தில் 2வது நாளாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, தாரமங்கலத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் திரண்டு சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சசிகலா, ஒருவர் அரசியலில் இருப்பதையும், இல்லாமல் போவதையும் பற்றி தனிமனிதர்கள் கருத்து சொல்ல முடியாது எனக் கூறினார்.

இதையும் படிங்க : அதிமுகவுக்கு ‘ஆப்பு’ வைத்த கோவை மேயர் கல்பனா.. அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர் !!

click me!