சசிகலா வழக்கை பொறுத்தவரை அவர் முன் கூட்டியே விடுதலையாக அதிக வாய்ப்புள்ளது. 4 ஆண்டு அவர் சிறை தண்டனை பெற்று இருந்தாலும் எல்லா கைதிகளுக்கும் கிடைக்கக்கூடிய விடுமுறை சலுகைகள் சசிகலாவுக்கும் பொருந்தும்.அந்த வகையில் சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாக முடியும்.
நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலையாகி விடுவார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இந்த மாதம் இறுதியில் வெளியே வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா 2021 ஜனவரி 27ம் விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாதபட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:- சசிகலா வழக்கை பொறுத்தவரை அவர் முன் கூட்டியே விடுதலையாக அதிக வாய்ப்புள்ளது. 4 ஆண்டு அவர் சிறை தண்டனை பெற்று இருந்தாலும் எல்லா கைதிகளுக்கும் கிடைக்கக்கூடிய விடுமுறை சலுகைகள் சசிகலாவுக்கும் பொருந்தும்.அந்த வகையில் சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாக முடியும்.
சசிகலா சம்பந்தப்பட்ட கோப்புகள் சிறைத்துறையினர் ஆய்வு செய்தாலே போதும். அவர் முன்கூட்டியே விடுதலையாகி விடுவார். அதற்கான தகுதி சசிகலாவுக்கு உள்ளது. கடந்த 1997 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் சசிகலா 35 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்கள் இப்போதைய தண்டனையில் இருந்து கழிக்கப்பட வேண்டும். கடந்த வருடம் 17 நாட்கள் பரோலில் அவர் வெளியே வந்துள்ளார். இதை கழித்து பார்த்தால் 18 நாட்கள் உள்ளது. இது தவிர நன்னடத்தை விதிகள், கைதிகளுக்கான விடுறை நாட்களை கழிக்கும்போது அவர் இந்த மாத இறுதியில் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது கொரோனா காலமாக உள்ளதால் சிறையில் உள்ளவர்களை பார்க்க சிறைத்துறையினர் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை கர்நாடகா சிறையில் இருப்பவர்களை சென்று சந்திக்க முடியவில்லை.
நாங்கள் சசிகலாவை சந்தித்து பேசுவதற்கு சிறைத்துறையில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். எங்களுக்கு அனுமதி கிடைக்கும் போது சசிகலாவை நேரில் பார்த்து விடுதலை சம்பந்தமாக பேசுவோம். சிறைத்துறை அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்போம். அதன் பிறகே சசிகலா எப்போது வெளியே வருவார் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க முடியும் என கூறியுள்ளார்.