
அதிமுக 4 கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், தற்போது நான் நினைத்தால் தமிழக சட்டப் பேரவையில் ஈஸியாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் சசிகலா புஷ்பா எம்.பி. அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். முன்னதாக போய்ஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக, மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா குற்றம்சாட்டி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனாலும் சசிகலா கட்சியில் இருந்த நீக்கப்பட்டாரே தவிர, அவர் நீக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற செயலருக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பவில்லை.
அதே நேரத்தில் தான் எம்பி பதவியில் இருந்து விலகமாட்டேன் என சசிகலா புஷ்பா அதிரடியாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.யாகவே அவர் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில்தான் ஜெயலலிதா மரணமடைந்தார். அவர் மறைந்தது முதலே சசிகலா குடும்பத்துக்கு எதிராக சசிகலா புஷ்பா கலகக் குரல் எழுப்பி வருகிறார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சசிகலா புஷ்பா எம்.பி. , அனைத்து எம்எல்ஏக்களும் தனக்கு பின்னால் உள்ளனர் என்றும், தான் நினைத்தால் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
தன் மீது ஜெயலலிதா அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் தான், நாடாளுமன்ற செயலருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அறிக்கையை அவர் அனுப்பி வைக்கவில்லை என்றும் சசிகலா புஷ்பா கூறினார்.