சசிகலா போடும் கணக்கு... எடுபடுமா..? பொடிபடுமா..? அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2021, 5:35 PM IST
Highlights

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சக்திவாய்ந்த பூகம்பம் அதிமுகவுக்குள் வெடிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

சசிகலா சென்னை திரும்பும் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டாலும் அதன்பின் அந்த உற்சாகத்தை பார்க்க முடியவில்லை. சசிகலா தங்கியிருக்கும் தி.நகர் அபிபுல்லா சாலை வீட்டுக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட வாகனங்கள் தென்படவே இல்லை. 

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி எடப்பாடி பழனிசாமியுடன் தனிமையில் பேசியுள்ளது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை கைகாட்டி சென்ற சசிகலா திரும்பி வருவதற்குள் தனது அரசியல் வளர்ச்சியை நிரூபித்தது மட்டுமல்லாமல் அதன் சக்தியை சசிகலா மீதே பிரயோகிக்கவும் எடப்பாடி முயற்சித்து வருகிறார்.

சிறையிலிருந்து சென்னை திரும்பியதும் அதிமுகவினர் சசிகலாவை நோக்கி வருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி வராதது சசிகலாவை பல்வேறு யோசனைகளுக்குள் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை ஆட்சி அதிகாரத்தின் கடைசி சொட்டையும் ருசி பார்த்துவிட்டே அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் வருவார்கள், அதன்பின் காட்சி மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சசிகலா இரு திட்டங்களுக்கு தயாராவதாக சொல்கிறார்கள். அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என்பதை வலியுறுத்தும் சசிகலா தன் பக்கம் வரும் நிர்வாகிகளைக் கொண்டு மீண்டும் அந்தப் பதவியை அதிகாரபூர்வமாக பெறுவது என்ற முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதை சாத்தியப்படுத்த முக்கியமான சிலருக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஒருவேளை இந்த திட்டம் பலனளிக்கவில்லை என்றால், சசிகலா அமமுக மூலம் தேர்தலை சந்திக்க மற்றொரு திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருக்கும் பட்சத்தில் தலைவராக சசிகலாவை நியமித்து 234 தொகுதியிலும் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளலாம். சிறு கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்ற திட்டமும் சசிகலா வசம் உள்ளது.

அமமுகவுக்கு வாக்கு வங்கி 5 சதவீதம்தான் என்று கூறப்படும் நிலையில் இதைவைத்து அதிமுகவுக்கு டஃப் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதை சசிகலா தரப்பும் உணர்ந்துள்ளது. அமமுக வெற்றி பெறாவிட்டாலும்கூட 60 முதல் 70 இடங்களில் திமுகவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடம் என்ற நிலைக்கு வரும். மேலும் இதன்மூலம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பும் பறிபோகும். அதிமுக தோல்வியைத் தழுவியபின் 1989 போன்று அணிகளை இணைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையை உருவாக்கலாம் என கணக்கு போடுகிறார் சசிகலா என்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சக்திவாய்ந்த பூகம்பம் அதிமுகவுக்குள் வெடிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

click me!