கணவர் நடராஜன் மரணமடைந்ததையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் தங்கியுள்ள அவருக்கு டார்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டு 21-ந் தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் வந்து கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் சசிகலா தங்கி இருந்து வருகிறார்.
அவருக்கு உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலா நேற்று காலையில் இருந்தே மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் டாக்டர் கணபதி, அருளானந்த நகர் வீட்டிற்கு வந்து சசிகலாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவர், சசிகலா நலமுடன் உள்ளார். அவரது உடல் சோர்வாக காணப்படுகிறது என்றார்.
சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்த அவரது சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இருந்து தனது குடும்பத்தினருடன் தஞ்சை வந்து சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
ஏராளமாக சசிகலா ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு நேற்று மாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.