அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சர்ச்சையாகி உள்ள நிலையில், பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவின் காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, இன்று பெங்களூவிலிருந்து தமிழகம் திரும்ப உள்ளார். பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சசிகலா சென்னை திரும்ப உள்ளார். பெங்களூருவில் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுக்கும் ஓட்டலுக்கு சசிகலா வந்தபோது, அவருடைய காரில் அதிமுக கொடி பறந்தது சர்ச்சையானது. இதனையடுத்து சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவது குறித்து தமிழக டிஜிபியை இரு முறை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சசிகலா இன்று தமிழகம் திரும்பும் சூழலில் அவருடைய காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் வரும் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா வாகனத்தை 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும், பட்டாசு வெடிக்கவும், இசை வாத்தியங்கள் வாசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள் அனுமதியின்றி வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காரில் பொருத்தப்பட்டுள்ள அதிமுக கொடியை தமிழகம் எல்லை வந்த பிறகு சசிகலா அகற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.