
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தாலும், கட்சி மற்றும் ஆட்சியின் ஒவ்வொரு நகர்வும், அவர் கண் அசைவில்தான் நடந்து வருகிறது.
கட்சி தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதிலும் அவர் தெளிவாகவே இருக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் பன்னீரை பொறுத்தவரை, சசிகலா இல்லாத அதிமுக, ஆட்சி என்பதுதான் லட்சியமாக உள்ளது.
ஆனால் சசிகலா பேச்சை தட்ட முடியாமலும், அதே சமயம் மோடிக்கு எதிராக செயல்பட முடியாத நிலையிலும் தவிப்பவர் முதல்வர் எடப்பாடி மட்டுமே.
ஒரு கட்டத்தில், ஆட்சியையும், முதல்வர் பதவியையும் தக்க வைத்து கொள்ளவேண்டும் என்ற முடிவில், சசிகலா குடும்பத்தை கைகழுவவும் முதல்வர் எடப்பாடி திட்டமிட்டார்.
ஆனால், சசிகலாவின் ஆதரவாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் தனித்தனியாக அணி பிரிந்து, கோரிக்கை என்ற பெயரில் மிரட்டல் விடுத்தபோதுதான் அவருக்கு உண்மை விளங்க ஆரம்பித்தது.
அதனால், சசிகலாவை தவிர்த்து முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக உணர்ந்த எடப்பாடி, சசிகலாவை விட்டு விலகி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் மோடியை திருப்திப்படுத்தி வருகிறார்.
ஆனாலும், எடப்பாடியை முழுமையாக நம்புவதற்கு சசிகலா தயாராக இல்லை. மேலும், குடியரசு தலைவர் முடிந்ததும் நிலைமை தலை கீழாக மாறும்.
பிரதமர் மோடி, ஆட்சியை கலைப்பார், அல்லது அணிகளை இணைத்து பன்னீருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தம்மை அப்புறப்படுத்தி விடுவார் என்றே சசிகலா அஞ்சுகிறார்.
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், சசிகலா கையில் தற்போது உள்ள ஒரே ஆயுதம், கடைசி அஸ்திரம், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருடன் பேசிய வீடியோ மட்டுமே.
அந்த வீடியோவில் ஜெயலலிதா, நோயாளிகள் அணியும் கவுன் அணிந்திருப்பதாலும், அவர் கோபத்தில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அதை வெளியிட்டால், அது ஜெயலலிதாவின் இமேஜை கெடுத்துவிடும் என்பதால், அந்த வீடியோ காட்சிகளை வெளியிட கூடாது என்று சசிகலா, தமது உறவினர்களுக்கு தடை உத்தரவு போட்டிருக்கிறார்.
ஆனாலும், தம்மை அரசியலை விட்டே முழுமையாக ஓரம் கட்டும் நிலை வந்தால், அதை வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை என்று சசிகலா காத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு கூட, மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உரையாடல் காட்சிகளை விரைவில் வெளியிடுவேன் என்று, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருப்பதும் இந்த வீடியோ காட்சிகளைதான் என்றும் கூறுகின்றனர்.
அந்த வீடியோ வெளியில் வந்தால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் விலகும். அதையே காரணமாக வைத்து அரசியல் செய்யும் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கும் சரியும்.
ஆனால், அதில் உள்ள ஜெயலலிதாவின் தோற்றமும், அவர் பேசும் வார்த்தைகளும், அவரது இமேஜை கெடுக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, அதை கடைசி அஸ்திரமாக பயன்படுத்தலாம் என்று சசிகலா நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.