மு.க. ஸ்டாலின் செயல்பாடு மெச்சுக்குற மாதிரி இல்ல... எடப்பாடி ஆளுமை வேற லெவல்... ‘நாட்டாமை’ ஒப்பீடு!

By Asianet TamilFirst Published Nov 4, 2019, 8:14 AM IST
Highlights

திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுவருகிறது. மு.க. ஸ்டாலினுக்கு பிறகு அவருடைய மகன் உதயநிதி வந்துள்ளார். கட்சியில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. 

கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு மு.க. ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அதே சமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்கவராக திகழ்ந்துவருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து தொண்டர்களி கருத்தை அறிந்து இறுதி முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.


“வருகிற 10-ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிப்போம். இப்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் இருந்துவருகிறோம். தொடர்ந்து அதே கூட்டணியில் நீடிப்பது குறித்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசி முடிவெடுக்கப்படும். இந்த விஷயத்தில் தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி இறுதி செய்யப்படும்.
திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுவருகிறது. மு.க. ஸ்டாலினுக்கு பிறகு அவருடைய மகன் உதயநிதி வந்துள்ளார். கட்சியில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அதே சமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்ந்துவருகிறார். 
அந்த அடிப்படையில்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஜெயலலிதா இருக்கும்போது கூட்டணியில் நாங்கள் இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிமுகவுடன் பயணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

 
ரஜினிக்கு சிறப்பு விருது மத்திய அரசு வழங்குவதாக  அறிவித்துள்ளது. இது அவரை பாஜகவுக்கு இழுப்பதற்கான முயற்சி என சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அந்த  அடிப்படையில் அது அவர்களின் கருத்து. ரஜினி, கமல் 2 பேரை ஒப்பிடும்போது ரஜினி சிறப்பான நடிகர் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு கமலுக்குக் கொடுக்கலாம்” என்று சரத்குமார் தெரிவித்தார்.

click me!