வாக்குமூலம் அளித்த சயான்... கொடநாடு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 18, 2021, 3:57 PM IST
Highlights

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராகப் பணியாற்றிய கனகராஜ் கொடநாடு பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்களை எடுத்து வருமாறு சயானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 

கொடநாடு விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் கிளப்பப்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கொடநாடு விவகாரத்தை கிளப்பி பலி வாங்கும் நடவடிக்கையை திமுக அரசு தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஆனால், இதில் அரசியல் தலையீடு இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யபட்டார்.

இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்புள்ளதாகக் கூறி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தற்போது நிபந்தனை ஜாமினில் உதகையில் சயான் தங்கி வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13 வழக்கு விசாரணையின் போது கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் சயான் உள்ளிட்ட 10 பேரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி போலிஸார் சம்மன் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட சயான் நேற்று மாலை 3.20 மணிக்கு உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி முடித்தனர்.

விசாரணையில் கொடநாடு கொள்ளை சம்பவம் அ.தி.மு.கவின் அப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரியும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன் உத்தரவின்பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சயான் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராகப் பணியாற்றிய கனகராஜ் கொடநாடு பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்களை எடுத்து வருமாறு சயானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சாயன் காவல்துறையிடம் மேலும் கூறுகையில் , கடந்த நான்காண்டு அ.தி.மு.க ஆட்சியில் தமக்கு பல்வேறு மிரட்டல்கள் இருந்ததால் பல உண்மைகளை என்னால் கூறமுடியாத நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார். நேற்று காவல்துறையினர் நடத்திய விசாரணை அறிக்கை வரும் 27ம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபாவிடம் தாக்கல் செய்யப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

click me!