புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த அப்துல்லா. நீண்ட கால திமுக விசுவாசி. அதிலும் களப்பணியில் இருந்த இவர் சமூக வலைதள வரவிற்கு பிறகு திமுகவின் சமூக வலைதள முகங்களில் ஒருவராக மாறிப்போனார். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமானது. அதிலும் பேஸ்புக் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் திமுக மிகக்கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
பல வருட காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக தனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் எம்எம் அப்துல்லா எனும் புதுக்கோட்டை அப்துல்லா.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த அப்துல்லா. நீண்ட கால திமுக விசுவாசி. அதிலும் களப்பணியில் இருந்த இவர் சமூக வலைதள வரவிற்கு பிறகு திமுகவின் சமூக வலைதள முகங்களில் ஒருவராக மாறிப்போனார். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமானது. அதிலும் பேஸ்புக் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் திமுக மிகக்கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதிலும் ஈழப்போரை தொடர்ந்து திமுக மீதான விமர்சனம் பேஸ்புக்கில் கடுமையானது. இதனால் இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் திமுக தமிழர் விரோத கட்சியாகவே அடையாளப்படுத்தப்பட்டுது.
அப்போது திமுகவிற்காக பேஸ்புக்கில் குரல் கொடுத்த வெகு சிலரில் ஒருவர் இந்த எம்எம் அப்துல்லா. துவக்கத்தில் திமுகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த அப்துல்லா பிறகு திமுகவிற்கு என்று பேஸ்புக்கில் தனி வட்டாரத்தையும் உருவாக்கினார். அந்த வகையில் தான் அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் அறிமுகம் கிடைத்தது. திமுக தகவல் தொழில்நுட்ப அணியை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் உருவாக்கிய போது எம்எம் அப்துல்லாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
மேலும் சபரீசன் கட்சி சார்ந்த சில விஷயங்களை சமூக வலைதளங்களில் கசியவிட எம்எம் அப்துல்லாவை பயன்படுத்தும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இதனிடையே ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்கள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்காற்ற ஆரம்பித்த நிலையில், அக்கட்சியின் சமூக வலைதள முகமாக இருக்கும் எம்எம் அப்துல்லாவிற்கு கலைஞர் இருக்கும்போது முதலே ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை தமிழகத்தில் ராஜ்யசபா எம்பி பதவிக்கான தேர்தல் நடைபெறும் போதும், அப்துல்லா பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழும்.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ராஜ்யசபாவிற்கு தேர்தல் நடைபெற்ற போது எம்எம் அப்துல்லா நிச்சயம் வேட்பாளர் ஆவார் என்று அடித்துக்கூறினார்கள். ஆனால் அப்போது திமுக வழக்கறிஞர் வில்சனை அக்கட்சி எம்பியாக்கியது. இதனால் அப்துல்லா ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே திமுக தலைமையை விமர்சித்தனர். கட்சிக்காக சமூக வலைதளங்களில் உழைப்பவர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று பேஸ்புக்கில் பதிவுகள் அதிகமாகின. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலிலாவது அப்துல்லாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் சபரீசன் எம்பியாக்குவதாக அளித்த வாக்குறுதியால் அப்துல்லா விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் தான் அதிமுக எம்பி முகமது ஜான் காலமானதை தொடர்ந்து காலியாகியுள்ள ராஜ்யசபா எம்பி பதவிக்கு அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக. இதன் மூலம் அப்துல்லாவின் பல ஆண்டு கனவு நனவாகியுள்ளது. இதனிடையே சபரீசனுக்கு நெருக்கமாக இருப்பதுடன் சமீப கலாமாக உதயநிதியுடனும் அப்துல்லா நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டதாக சொல்கிறார்கள். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுநாள் வரை சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராக வஞ்சத்துடன் செயல்பட்டு வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உதயநிதி ஸ்டாலின் டீமுக்கு அப்துல்லா பேருதவியாக இருந்ததாக சொல்கிறார்கள்.
இதே போல் ஊடகங்கள் சில தொடர்ச்சியாக திமுக விரோதத்துடன் செயல்பட்டு வருவதையும் வெளிப்படுத்தி கட்சித் தலைமை மூலம் அவர்களுக்கு கடிவாளம் போடவும் அப்துல்லா உதவியதாக சொல்கிறார்கள். இப்படி அவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில் எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்துல்லாவால் இந்த பதவியில் 4 வருடங்கள் மட்டுமே இருக்க முடியும், இது முழுமையான பதவிக் காலத்தையும்அனுபவிக்கும் தேர்தல் அல்ல இடைத்தேர்தல் என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.