தஞ்சாவூர்
சம்பாதித்தால் போதும் என்று இருக்கும் ஆட்சியாளர்களால் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே சோமாலியா நாடாக மாறும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. இதில், கலந்து கொண்ட டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியது:
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒன்பது பேர் கொண்ட மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம்.
முத்தலாக் தடைச் சட்டம், நீட் தேர்வு, ஹஜ்பயணிகள் மானியம் ரத்து போன்றவற்றை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இதுகுறித்து கேட்டால் நீதிமன்ற உத்தரவு என்று கூறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
காவிரி பகுதி அதிக பாசனபரப்பை கொண்டது. எனவே, காவிரி நீரை பெற போராடும் உரிமை நமக்கு உள்ளது. ஆனால், இன்று காவிரி பகுதியில் மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டம், எண்ணெய் எரிவாயு, நிலக்கரி எடுக்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துகிறார்கள்.
நாம் இன்று சோமாலியா நாட்டை பற்றி பேசுகிறோம். சோமாலியா நாடு ஒருகாலத்தில் இயற்கை வளம் நிறைந்த பகுதி. அங்கு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் சோமாலியா நாடு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.
அதுபோல தமிழக ஆட்சியாளர்கள் சம்பாதித்தால் போதும் என்று உள்ளனர். இதே நிலை நீடித்தால் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே சோமாலியா நாடாக மாறும். இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.
பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். எதிர்காலத்தில் டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் முன்பு அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் நாம் இதையும் செய்யாமல் விட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது சாத்தியம் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காவிரி நீரை பெற போராட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குறுகிய நாட்கள்தான் உள்ளன. எனவே, அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்" என்று அவர் கூறினார்.