அயோக்கியன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. ஆர்.எஸ்.பாரதியையும் சும்மா விடக்கூடாது.. ஸ்டாலினுக்கு பாஜக எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Jan 14, 2023, 6:51 AM IST
Highlights

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட திமுக சதி.

தமிழக முதல்வர் ஆளுநர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை திமுகவினர் விமர்சிக்கின்றனர் என நாராயணன்  திருப்பதி கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன்  திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற அயோக்கியனை கைது செய்து சிறையிலடைக்கவில்லையெனில் ஆளுநர் குறித்த அந்த தரம் கெட்ட அந்த பதரின் வார்த்தைகள் திமுக ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும். தொடர்ந்து இந்த அயோக்கிய பதர் பாஜக தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து  புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து இந்த நபர் கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது திமுகவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு ஆளுநரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து ஆளுநரை கொலை செய்வோம் என்று கூறியதும், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட திமுக சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில், மாநில அரசு நிர்வாகத்தை  திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது திமுக. 

மேலும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, ஆளுநரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்கு 'நாங்கள்' தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு,  திமுகவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.  தமிழ்நாடு காவல்துறை  உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். தீவிரவாத சக்திகளோடு திமுக விற்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய வேண்டும். மேலும், இரு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர் திமுகவினர் என்பது அந்த செய்திகளை வதந்தியாக்கி விட்டன. 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் திமுக தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் அவர்களும்,  சென்னை காவல்துறை அவர்களும் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியமும், அவசரமும் கூட.

உண்மையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, திமுக பொதுகூட்டங்களில்  அமைச்சர்களின் முன்னிலையில் கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இருவரையும் திமுகவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என  நாராயணன்  திருப்பதி கூறியுள்ளார்.

click me!