கொரோனா ஊழல் குறித்து பேசியதாலேயே கைது..! ஆர்.எஸ் பாரதி பேட்டி..!

By Manikandan S R SFirst Published May 23, 2020, 7:59 AM IST
Highlights

பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஓபிஎஸ் செய்த ஊழலை பற்றி புகாரளித்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.  தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை நீதிபதி ஆக்கியிருந்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது. தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஆலந்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

தலித் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி அதிரடி கைது..!

போலீசார் அழைத்து செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஓபிஎஸ் செய்த ஊழலை பற்றி புகாரளித்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்த முடியாது. கொரோனா ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கப்படும். நான் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டிருந்தேன் . இந்த சூழ்நிலையில் என்னைக் கைது செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

click me!