பேரறிவாளன் விடுதலை மூலம் ரூட் கிளியர்.. நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை பண்ணுங்க.. ஜவாஹிருல்லா கோரிக்கை!

By Asianet TamilFirst Published May 26, 2022, 9:07 AM IST
Highlights

மாதையனுக்கு ஏற்பட்ட கதி ஏனைய நீண்டகால சிறைவாசிகள் யாருக்கும் ஏற்பட விடக்கூடாது. தமிழக அரசு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் உள்ளதை பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களுடைய விடுதலையை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 35 ஆண்டுகள் சிறையில் இருந்த சந்தன மரம் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். மாதையன் மரணம் அடைந்த நிலையில் இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீரப்பனின் அண்ணன் மாதையன் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசியாக சிறையில் அடைக்கப்பட்ட  நிலையில் உடல்நலம் மோசம் அடைந்து சிறையிலேயே உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நீண்டகால சிறைவாசிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களுடைய முன் விடுதலை குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் குழுவை அமைத்தது.

அந்தக் குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று நீண்டகால வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை அடைய தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மாதையனுக்கு ஏற்பட்ட கதி ஏனைய நீண்டகால சிறைவாசிகள் யாருக்கும் ஏற்பட விடக்கூடாது. தமிழக அரசு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் உள்ளதை பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதைப் பயன்படுத்தி நீதியரசர் ஆதிநாதன் குழுவிடமிருந்து விரைவாக அறிக்கையைப் பெற்று நீண்ட காலம் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும்” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

click me!