ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்.. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பும்..!

First Published Dec 5, 2017, 11:06 AM IST
Highlights
r.k.nagar by election and 2g spectrum case judgement on same date


கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் டிசம்பர் 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தாக்கல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து 6 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை தயாரிக்கும் பணி நடைபெற்றது. 

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து தீர ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதால், இந்த வழக்கை விசாரித்துவரும் ஒ.பி.ஷைனி ஓய்வின்றி தீர்ப்பு எழுதும் பணியில் தீவிரமாக பணியாற்றுவருவதாக தகவல்கள் வந்தன.

சுமார் 6 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுவந்த நிலையில், வரும் 21-ம் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஷைனி இன்று தெரிவித்தார்.

2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் டிசம்பர் 21-ம் தேதி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்போடு 2ஜி வழக்கின் தீர்ப்பும் சேர உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அன்றே 2ஜி வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட இருப்பது, திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுகள், அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி ஆகியோர் ஆவர். எனவே தீர்ப்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதுவும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கலக்கம் திமுகவினரிடையே நிலவுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அன்றே 2ஜி வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளதால் பரபரப்பு இரட்டிப்பாகியுள்ளது.
 

click me!