மதுசூதனன் மீதான மோசடி புகாரை ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்த காரணத்தினால் தான் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு மரண பயத்தை காட்டி அனுப்பியுள்ளனர். ஏற்கனவே மதுசூதனன் அமைச்சராக இருந்த போது போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை பெற்ற புகார் உள்ளது. இந்த புகாரில் இப்போது இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் மதுசூதனுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மதுசூதனன் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் ஆர்.கே.நகர் சென்ற டி.டி.வி தினகரனை நோக்கி கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. இதுநாள் வரை ஆர்.கே.நகருக்கு தினகரன் சென்று திரும்பும் போதெல்லாம் ஒரு 20 அல்லது 30 பேர் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கடந்த முறை தினகரன் தொகுதிக்கு சென்ற போது எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிலரை அவரது ஆதரவாளர்கள் நய்யப்புடைத்து அனுப்பினர். இதனால் இந்த முறை தொகுதிக்கு செல்லும் போது பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று தினகரன் கருதினார்.
ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி மதுசூதனன் ஆட்கள் ஏராளமான கற்கள் மற்றும் செருப்புகளை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். தினகரன் கார் உள்ளே நுழைந்ததும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. திடீரென வானத்தில் இருந்து கற்கள் மழை பொழிந்தது போல் தினகரன் மற்றும் அவருடன் வந்த கார்கள் மீது கற்கள் படபடவென விழுந்தன. இதனால் காருக்குள் இருந்த தினகரனே ஒரு நிமிடம் ஆடிப்போனார்.