டிபிஐ வாளாகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்..!! வேகமெடுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2020, 4:25 PM IST
Highlights

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை காணொளிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 9 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 19-6-2017 அன்று சட்டப் பேரவை விதி எண் 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் பள்ளிக் கல்வி இயக்ககம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும் பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்கு கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை குறிக்கும் வகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா கட்டிடம் என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார். 

 

அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் சுமார் 1,22,767 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 6 தளங்களுடன் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தின் தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்க அலுவலகம், இணை இயக்குனர் அலுவலகம். பொது கூட்டரங்கம்,  இரண்டாம் தளத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் அறைகள். மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள், நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம், இணை உறுப்பினர் அறைகள், துணை இயக்குனர் அறைகள், உறுப்பினர்கள் அறைகள், ஐந்தாம் தளத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகங்கள், ஆறாம் தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. 

மேலும் நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், கோமங்கலம்புதூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 கோடியே 60 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் என மொத்தம் 49 கோடியே 60 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக்கல்வி இயக்கத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் இன்று ஏழு நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

 

click me!