அரசு ஊழியர்களின் குழந்தைகள் மீது அரசு காட்டும் அக்கறை இதுதானா.? பெற்றோர்கள் கொரோனவில் இறந்தால் சலுகை இல்லை.

By Ezhilarasan BabuFirst Published Jun 12, 2021, 2:02 PM IST
Highlights

குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்காது என அதிஙல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் எனவும் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். 

இந்நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான சிறப்பு பணிக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கீடு செய்ய வேண்டும் எனவும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளை பெற்று கணக்கீடு செய்ய வேண்டும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை, மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு கட்டாயமாக ஆஜர் படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும் பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படுவதோடு,  பிரதம மந்திரி நிதி உதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் எனவும் சீறுடை, புத்தகமும் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தை நல அலுவலர், தலைமை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் கொண்ட 6 நபர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்காது என அதிஙல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!