
ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குமாறு உணவுத் துறை அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் அங்கு துணநிலை ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது. இதனால் முதலமைச்சர் – ஆளுநர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க உணவுத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கெஜ்ரிவால் தனது கட்சியின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சி ஆடசிக்கு வந்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்குமாறு உணவுத்துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.