நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி... நடிகர் ரஞ்சித் ஆவேசம்

By sathish kFirst Published Feb 26, 2019, 7:09 PM IST
Highlights

அதிமுகவுடனான கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாமக மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வந்த நடிகர் ரஞ்சித்தும் இன்று பாமகவில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுகவுடனான கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாமக மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வந்த நடிகர் ரஞ்சித்தும் இன்று பாமகவில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று  செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாமக மாநில துணைத் தலைவருமான ரஞ்சித், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு என்னால் வாழ இயலாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும். இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது. 

நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஆனால் ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. நான் எனது பதவிகளை விளக்கிக் கொள்ள தான் உங்களை இங்கு அழைத்தேன். எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்கிறேன். 8 வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா. எப்படி அவர்களால் கூட்டணி அமைக்க முடிந்தது. 

முதல்வரையும் மாறி மாறி மடையன், புறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்றவர்கள் என கடந்த வாரம் வரை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி. 

மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள். மதுக்கடை வைத்திருப்பவர்கள் உடன் கூட்டணி வைக்க முடிந்தது?  அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் கூறிவிட்டு எப்படி கூட்டணி வைக்க முடியும்! பாமக, அதிமுக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. இவர்கள் பதவிக்காக, பணத்திற்காக இந்த கூட்டணி வைத்துள்ளனர். தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தினமும் செத்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் இதைப் போல் நினைப்பது இயல்பு தானே. ஒரு நல்ல தலைவன் முதல்வராக வரமாட்டாரா என்று. அதற்காக தான் அன்புமணியை தேர்ந்து எடுத்தோம்.

click me!