அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு... பாமகவை விட்டு விலகிய முக்கிய நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Feb 26, 2019, 6:14 PM IST
Highlights

அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகரும், பாமக மாநிலத் துணைத் தலைவருமான ரஞ்சித் அக்கட்சியை விட்டு விலகினார். 
 

அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகரும், பாமக மாநிலத் துணைத் தலைவருமான ரஞ்சித் அக்கட்சியை விட்டு விலகினார். 

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக மகளிரணித் தலைவி ராஜேஸ்வரி ப்ரியா சில தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில்  நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

 

கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த அவர், பாமக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாமகவில் இணைந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போல அந்தக் கட்சி இல்லை. சட்டையை மாறிக் கொள்வதைப்போல கூட்டணிக்காக கொள்கைகளை பாமக தலைமை மாற்றிக் கொண்டுள்ளது. அதனை நான் விரும்பவில்லை. மாற்றம் முன்னேற்றம் என முழங்கி விட்டு ஏமாற்று விட்டனர். 

எத்தனை போராட்டங்களை இந்த அதிமுக அரசுக்கு எதிராக நடத்தியது பாமக. 8 வழிச்சாலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தியது முதல் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு அந்தக் கட்சியினருடன் கூட்டணி அமைத்துள்ளதை மனது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  நான் பதவிக்காக கூஜா தூக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போரட்டத்தில் ஈடுபட்டு விட்டு இப்போது டாஸ்மாக் கடைக்கு முன் நின்று கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி சேர்வதில் என்ன லாஜிக் இருக்கிறது.

 

 

டயர்நக்கி, அடிமைகட்சி, ஐந்தறிவு கட்சி, ஆண்மையற்றவர்கள் என அவர்களை கீழ்தரமாக விமர்சித்து விட்டு இப்போது அவர்களையே அழைத்து விருந்து வைத்து கொஞ்சி குலாவுவதை மனம் ஏற்கவில்லை மனம் புலுங்கித் தவிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமகவை காறித் காறித்துப்புகிறார்கள். ஆகையால் நான் பாமகவிலிருந்து விலகிக் கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஞ்சித் ஏண்கெனவே அதிமுகவில் இருந்து விலகியே பாமகவில் இணைந்தார். 

click me!