முதல்வர் ரங்கசாமி மக்களை பற்றி கவலைபடாதவர்… ஆவேசமாக பேசிய நாராயணசாமி!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 6:15 PM IST
Highlights

முதலமைச்சர் ரங்கசாமிக்கு மக்களை பற்றி கவலையில்லை என்றும் முதலமைச்சர் நாற்காலி மட்டும் தான் அவரின் ஒரே குறிக்கோள் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமிக்கு மக்களை பற்றி கவலையில்லை என்றும் முதலமைச்சர் நாற்காலி மட்டும் தான் அவரின் ஒரே குறிக்கோள் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி இந்திராநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்போதைய முதலமைச்சர்  ரங்கசாமியை வெளுத்து வாங்கினார். முதலமைச்சர் ரங்கசாமி முன்பு இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை என்றும் அந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் அவர் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.  மேலும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு மக்களை பற்றி கவலையில்லை என்று குறிப்பிட்ட நாராயணசாமி, ரங்கசாமிக்கு ஒரே குறிக்கோள் முதலமைச்சர் நாற்காலி மட்டும் தான் என்றும் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை என்றும் புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை பெற மத்திய அமைச்சர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று கூறிய நாராயணசாமி, இந்திராநகர் தொகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை கவுன்சிலர்கள் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டதோடு, இந்த தொகுதியில் தற்போது உள்ள எம்.எல்.ஏ. முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்றும் அவருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பல உதவிகள் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டார். மேலும் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது ஏழை எளிய மக்கள், மீனவர்கள், விவசாயிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினோம். ஆனால் மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது. அவர் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்கவில்லை. நமது ஆட்சியின் போது புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவைகள் உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள அரசு அந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறது என்று நாராயணசாமி தெரிவித்தார். 

click me!