
திமுகவுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே நல் உறவுவும் நம்பிக்கையான உறவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவும் திராவிட மாடல்
ரம்ஜான் திருநாளையொட்டி சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ரம்ஜான் மாதத்தில் செய்யப்படும் உதவிகள் மனிதநேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்த மனிதநேயம் நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. ஒருவகையில் இதுவும் ஒரு திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சலும் ஆத்திரமும் கோபமும் வரும். எல்லோருக்கும் எல்லா உதவிகளும் போய் சேர வேண்டும். இதுதான் திமுகவின் கொள்கை, லட்சியம். அந்த அடிப்படையில்தான் ‘திராவிட மாடல்’ என்று தொடர்ந்து சொல்கிறோம்.
கடந்த 2006-ம் ஆண்டில் கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் தயவில்தான் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த அதிமுக ‘இது ஒரு மைனாரிட்டி ஆட்சி’ என்று விமர்சனம் செய்வது போல, கொச்சைப்படுத்தி பேசுவது, கிண்டல் செய்வது, கேலி செய்வது என ஒரு கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது முதல்வராக தலைவர், சட்டப்பேரவையில் பதில் சொன்னார், ‘எங்களை பார்த்து நீங்கள் மைனாரிட்டி ஆட்சி... மைனாரிட்டி ஆட்சி என்று சொல்கிறீர்கள். உண்மைதான். மைனாரிட்டிக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான் இந்த ஆட்சி’ என்று அப்போது சொன்னார். இது தொப்புள் கொடி உறவு. அதனால்தான் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோது அதை எதிர்த்து அன்றைக்கு குரல் கொடுத்தோம், போராடினோம், எதிர்த்து வாக்குகளையும் போட்டோம்.
திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நல்லுறவு
தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த அவசர சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்று தீர்மானம் போட்ட கட்சிதான் திமுக. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது எதிர்த்தோம். ஆளுங்கட்சியான பிறகு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். தீர்மானத்தை முன்மொழிந்தது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின். சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன கட்சி எதுவென்று உங்களுக்கு தெரியும். ஆனால், அந்த இடஒதுக்கீட்டை அளித்ததன் மூலம் சிறுபான்மை சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து பெருமைப்படுகிறோம்.
சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை முடக்கியது அதிமுக ஆட்சி. ஆனால் அந்த மக்களுக்கு அந்த கழகத்தை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது, சிறுபான்மை மக்களுக்கு பெரும் நலத்திட்ட உதவிகளை தொழில் தொடங்க நிதி உதவிகள் கிடைக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது திமுக ஆட்சி. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருவது உங்கள் வீட்டுப் பிள்ளையான திமுக. உங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் அதில் நானும் ஒருவன். நான் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவன். நீங்களும் எப்போதும் என்னோடு இருக்கக்கூடியவர்கள். அதனால்தான் திமுகவுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே நல் உறவுவும் நம்பிக்கையான உறவும் இருக்கிறது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.