
வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் நேற்று ஒரே நாளில் நடந்த இரு படுகொலைகள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உறையவைத்திருக்கிறது. பட்டப்பகலில் ஒன்று, பொழுது சாயும் நேரத்தில் மற்றொன்று என அதிமுவைச் சேர்ந்த இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும், அக்கொலைகளை தடுக்க தமிழக காவல்துறை தவறியதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.
திருவண்ணாமலை நகர அதிமுக செயலராகவும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்த கனகராஜ் நேற்று காலை தமது நண்பருடன் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, இன்னொரு இரு சக்கர ஊர்தியில் வந்து வழிமறித்த கும்பல் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளது.
இந்த கொலை நடக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளன. அவை இப்போது சமூக ஊடகங்கள் மூலம் வேகமாக பரவி வருகின்றன. கொலையாளிகள் மிகவும் அலட்சியமாக வந்து, அதிமுக பிரமுகர் பயணம் செய்த இரு சக்கர ஊர்தி மீது மோதி சாய்க்கின்றனர். அதன்பின் அவரது நண்பரை தாக்கித் துரத்தியடித்து விட்டு, கனகராஜை வெட்டிக் கொலை செய்கின்றனர். கனகராஜ் உயிரிழந்தது உறுதியான பிறகும் கொலையாளிகளில் ஒருவர் மீண்டும் மீண்டும் அரிவாளால் வெட்டி உடலை சிதைக்கிறார். அதன்பிறகும் எந்த பதற்றமும் இன்றி மிகவும் இயல்பாக அங்கிருந்து சென்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்த படுகொலை திருவண்ணாமலை நகரத்தில் ஏதோ ஒதுக்குப்புறமான இடத்தில் நடைபெறவில்லை. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரத்திலிருந்து சில அடி தொலைவில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல்நிலையம் உள்ளது.
ஆனாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் படுகொலை நடந்திருக்கிறது என்றால் காவல்துறை குறித்த அச்சம் அறவே இல்லாமல் போய்விட்டது என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. காவல்துறை செயலிழந்து வருவதையே இக்கொலை காட்டுகிறது.
அதேபோல், வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும், கல்லூரி அதிபருமான ஜி.ஜி. ரவி என்பவர் வேலூர் - காட்பாடி சாலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வெளியே வரும் போது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தக் கொலையும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது. ஜி.ஜி. ரவி படுகொலை செய்யப்படுவது காவல்துறையினருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும், பல்வேறு காரணங்களால் இந்த கொலையை அவர்கள் தடுக்காமல் இருந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழகக் காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. திறமையானவர்களை முக்கியமான பணிகளில் அமர்த்தாமல், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை அமர்த்துவது, குற்றவாளிகளுக்கும், காவல்துறையில் உள்ள சிலருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 11,600-க்கும் அதிகமான கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2016&ஆம் ஆண்டில் மட்டும் 1818 படுகொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒன்று கூட மேற்கொள்ளப்படவில்லை. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடும் ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் நடத்தப்படுவது வழக்கம். குற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும். ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாட்டை ஆட்சியாளர்கள் நடத்தவில்லை.
தமிழத்தில் அமைதியை நிலைநாட்டுவதும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வதும் தான் மக்கள் அரசின் முக்கியக் கடமையாகும். ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. மக்கள் சேவை செய்வதற்கு பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகளில் தான் ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பவரே காவல்துறையை நம்பாமல் தனியார் பாதுகாவலர்களை தமது காவலுக்கும், இல்லத்தின் காவலுக்கும் நியமித்திருப்பதில் இருந்தே காவல்துறையின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள முடியும். எனவே, காவல்துறையை வலுப்படுத்தும் விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், காவல்துறை சீரமைப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; தமிழகத்தின் சட்டம்&ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.