இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் நடத்துவோம் என்று பாமக ராமதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
இதில் பேசிய ராமதாஸ், டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிகை. அதன் நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான்.
அப்போது தம்பி இந்த கேள்விக்கு நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய்.
இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் என்று பதில் அளித்தாக கூறினார்.
உடனே அனைவரும் எழுந்து என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டனர். 100 தடவை இதனை கேட்டுவிட்டீர்கள் என்றேன். 101வது தடவை கேட்டால் பதில் சொல்ல வேண்டியதுதானே என்று ஒருவன் கூறினான். அப்படியென்றால் ராமதாஸ் என்றால் மரம்வெட்டி என நிரூபிக்க அவர்கள் முயல்கிறார்கள்” என்று கடுமையாகப் பேசினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்தவர், ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, நான் வைத்த மரத்தை வந்து பாருங்கள் என்கிறேன். ஒரு வருஷமாக இது வரை எந்த நாயும் பார்க்கவில்லை என்றார்.
நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன், அனைவருக்காகவும்தான் இந்த ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறான் என்றும் அவர் குறிப்பிட்டார். பாமக ராமதாசின் இந்த பேச்சு பொது மக்கள் மத்தியிலும், பத்திரிக்கையாளர்களள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.