இது தமிழர்களுக்கான அநீதி..! மத்திய அரசை வறுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ்..!

By Manikandan S R SFirst Published Jan 9, 2020, 10:02 AM IST
Highlights

7 தமிழா்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முறையிட்டிருக்கிறாா். 7 தமிழா்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில், மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது. அநீதியானது. 

ராஜிவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன்,நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து பல மாதங்கள் கடந்து விட்டன. எனினும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் தற்போது வரை அறிவிக்கவில்லை. இந்தநிலையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதில் மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது என கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தொடா்ந்துள்ள வழக்கில், 7 தமிழா்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முறையிட்டிருக்கிறாா். 7 தமிழா்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில், மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது. அநீதியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழா்களையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018 செப்டம்பா் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதனடிப்படையில்தான், தமிழக அமைச்சரவை 7 தமிழா்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கும் தீா்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் தம்மை விடுதலை செய்யாதது சட்டவிரோதம் என்றும், தம்மை விடுதலை செய்யும்படி ஆணையிட வேண்டும் என்றும் கோரிதான் நளினி வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கில், மத்திய அரசின் சாா்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எந்த அடிப்படையில், தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளா் 2018 ஏப்ரல் 18-இல் எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தாா் என்று தெரியவில்லை. மத்திய அரசின் ஆணைப்படியோ அல்லது அனுமதி பெற்றோ இந்தக் கடிதத்தை அவா் தாக்கல் செய்தாரா அல்லது தன்னிச்சையாக செயல்பட்டாரா? என்பதும் தெரியவில்லை.

ஆனால், இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. 7 தமிழா்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீா்மானத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழக ஆளுநருக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் கால அவகாசம் எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை என்பதை காரணம்காட்டி, காலவரையின்றி ஆளுநா் தாமதம் செய்வது அநீதியாகும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!