தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் மோடி தலையிட்டு அமகதாபாத்தில் தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள மணிநகரில் ‘அமகமதாபாத் தமிழ் மேல் நிலைப்பள்ளி’ ஒன்று செயல்பட்டுவந்தது. ஆனால், மாணவர் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதாகக் கூறி அந்தப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ்ப் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!” என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.