பட்டமளிப்பு விழாவிற்கு நேரம் ஓதுக்காத ஆளுநர்..! பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி-ராமதாஸ் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jan 5, 2023, 12:04 PM IST
Highlights

 தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி அவர்களை ஆளுனர் மாளிகையில் சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தாத காரணத்தால் பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இதுவரை அந்த பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. அதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட்டம் வழங்குவது தாமதப்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.! அதிகம், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமாக 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களின் இறுதி பருவத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே அல்லது ஜூன் மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் முதல்  திசம்பர் மாதம் வரையிலான காலத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்படும். பட்டமளிப்பு விழாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு அவர்களின் கல்லூரிகள் மூலமாகவே சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் திசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

எழுத்தாளர், மக்கள் சேவகர் சகோதரி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! அண்ணாமலை டுவிட்டர் பதிவு

ஆனால், நடப்பாண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும்  இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. அதன் பாதிப்புகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்களுக்கு தற்காலிகச் சான்றிதழ் வழங்கப்படும். அதன் செல்லுபடியாகும் காலம் அதிகபட்சம் 6 மாதங்கள் தான். கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட தற்காலிக பட்டச்சான்றிதழ் இப்போது காலாவதியாகி விட்டது. அதற்குள் நிலையான பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பட்டமளிப்பு விழாக்கள் இன்னும் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

நடப்பாண்டில் இதுவரை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மட்டும் தான் கடந்த திசம்பர் 24-ஆம் தேதி நடைபெற்றது. மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள்  எப்போது நடைபெறும்? என்ற வினாவுக்கான விடை அவற்றின் துணைவேந்தர்களுக்கே தெரியவில்லை. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுனர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் கடந்த திசம்பர் 19-ஆம் தேதி தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி அவர்களை ஆளுனர் மாளிகையில் சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுனர் மாளிகை இன்னும் அனுமதி அளிக்காததற்கு காரணம் என்ன? என்பது குறித்து ஏராளமான யூகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளாமல் அது குறித்து கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது. அதே நேரத்தில், காரணம் எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களை தாமதப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு,  தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு ஆளுனர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 இதையும் படியுங்கள்

கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து பேசலாமா? RN.ரவியை ரவுண்ட் கட்டும் டி.ஆர். பாலு

click me!