ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம்..! வைகோவுக்கு ஆசையை தூண்டும் ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Feb 28, 2019, 9:38 AM IST
Highlights

ஒரே ஒரு தொகுதி தான் என்றால் கூட்டணி எப்படி அமைப்பது என்று கேள்வி எழுப்பிய வைகோவிடம் அப்படி என்றார் ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம் என்று ஸ்டாலின் தரப்பு ஆசையை தூண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு தொகுதி தான் என்றால் கூட்டணி எப்படி அமைப்பது என்று கேள்வி எழுப்பிய வைகோவிடம் அப்படி என்றார் ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம் என்று ஸ்டாலின் தரப்பு ஆசையை தூண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் புள்ளி 5 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ள மதிமுகவிற்கு ஒரு தொகுதியே கொடுக்ககூடாது என்பது தான் சபரீசன் டீமின் நிலைப்பாடு. இதனால் தான் வைகோ கட்சியுடன் தி.மு.க தொகுதி உடன்பாடு செய்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஓராண்டாக ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி வரும் ஒரே காரணத்திற்காக தி.மு.க ஒரு தொகுதியை மதிமுகவிற்கு கொடுக்க முன்வந்துள்ளது. 

ஆனால் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு கூட்டணியில் இருக்கும் நிலையில் தான் இல்லை என்று வைகோ திட்டவட்டமாக திமுக தரப்புக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த வாரமே வைகோ இதனை கூறிய நிலையில் தான் கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், விரைவாக தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுவிட்டு 40 தொகுதிகளுக்கும் வைகோ பிரச்சாரத்திற்கு புறப்பட வேண்டும் என்று கூறினார்.

 

அதாவது ஒரு தொகுதியை வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை துவக்குங்கள் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற ரீதியில் ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது தான் தனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என்று எண்ணித்தான் வைகோ தேம்பி தேம்பி அழுதார். அதன் பிறகும் கூட ஒரு தொகுதி என்பதில் இருந்து ஏறி வர தி.மு.க தரப்பு மறுக்கிறது. ஏன் பேச்சுவார்த்தைக்கு கூட மதிமுக பேச்சுவார்த்தை குழுவுக்கு அழைப்பு இல்லை.

 

இந்த நிலையில் வைகோவை இந்த தேர்தலில் கைவிட்டு விட கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே போனால் போகிறது ஒரு மாநிலங்களை சீட்டை கொடுத்து விடலாம் அவரை கூட்டணிக்கு உடன்படச் சொல்லுங்கள் என்று ஸ்டாலின் கூறியதாக சொல்கிறார்கள். மாநிலங்களவை எம்பி சீட் என்றால் வைகோ கூட்டணிக்கு ஒத்துக் கொள்வார்கள் என்கிறார்கள். ஆனால் திமுக கொடுக்கும் மாநிலங்களவை சீட்டை பெறுவது என்பது அந்த கட்சியில் வைகோ தன்னை இணைத்துக் கொள்வதற்கு சமம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் கடைசி காலத்தில் ராஜ்யசபா எம்பி என்கிற ஆசை வைகோவை விடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பொருத்திருந்து பார்ப்போம் வைகோ என்ன முடிவு எடுக்கிறார் என்று.

click me!