
பெங்களூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நேற்று ரஜினி சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஏழு பேரை விடுவிக்கலாம் என்கிற பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த செய்தியாளர் ஏழு பேரை விடுவிக்கலாம் என்கிற பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறினாரே தவிர ஏழு தமிழர்கள் என்று கூறவில்லை.
இதனால் தான் ரஜினிகாந்த் எந்த ஏழு பேர் என்று பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் என்று அந்த செய்தியாளர் விளக்கம் அளித்தார். அதற்கு ரஜினி அந்த ஏழு பேரையும் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினி கூறியது, ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்கிற பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது தனக்கு தெரியாது என்கிற அர்த்தத்திலேயே தெரிவித்தார்.
அந்த செய்தியாளர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்க முயன்ற போது தான் ரஜினி, இல்லங்க நான் இப்ப தான் வந்து இருக்கேன் எனக்கு உண்மையிலேயே தெரியாது என்று பதில் அளித்தார். அதாவது தமிழர்கள் ஏழு பேரையும் தனக்கு தெரியாது என்று ரஜினி எங்குமே கூறவில்லை. அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்குமாறு தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்கிற தகவல் தான் தனக்கு தெரியாது என்று ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் அந்த தமிழர்கள் ஏழு பேர் விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று ஒரு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது மற்றொரு செய்தியாளர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார். இதனால் பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்வியை ரஜினி முழுமையாக புரிந்து கொள்ளாமல் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். அதாவது ரஜினி அந்த பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாதது அவர் பேசுவதிலேயே தெரிந்தது. ஆனால் ரஜினி எந்த இடத்திலும் ஏழு தமிழர்களை தனக்கு தெரியாது என்று கூறவே இல்லை.