
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினிக்கு எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூற தெரியவில்லை என்றும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கின்றனர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினிக்கு எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூற தெரியவில்லை என்றும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கின்றனர் என்றும் சாடினார்.
மேலும் தமிழகம் திராவிட மண், திராவிட காட்சிகளை தவிர மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.