இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? என நடிகர் ரஜினிகாந்த்க்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஆதரித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். மத்திய அரசின் இந்த செயல் ராஜதந்திரம் மிகுந்தது என்றும், நாட்டின் பாதுகாப்புக்காக மோடியும், அமித்ஷாவும் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என ரஜினி பேசினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஹைதிராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி , ``370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு, தமிழகத்தை சேர்ந்த நடிகர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன் என கூறியுள்ளார்.
அப்படியென்றால் இந்த சூழ்நிலையில் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? நம் நாட்டுக்கு மற்றுமொரு மகாபாரதம் வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசுக்கு பாசம் கிடையாது. அவர்களுக்கு எல்லாம் காஷ்மீர் மண்ணின் மீதுதான் பாசமாகும். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்கள் நீதியையோ, சேவையையோ விரும்பவில்லை.
அரசு மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே விரும்புகிறதே தவிர, யாரும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை என்பதை நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் என மத்திய அரசையும் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.