ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்! ரஜினியின் நண்பரும் நடிகருமான அம்பரீஷ் பேட்டி!

First Published Jan 3, 2018, 4:44 PM IST
Highlights
Rajini is the next Chief Minister of Tamil Nadu Rajini friend and actor Ambresh interview


தமிழகத்தில் அடுத்து நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அவரது நண்பரும், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும் தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி
தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு ஆதரவாக நடிகர் அம்பரீஷ் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நண்பர் ரஜினி, அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, புத்தாண்டில் நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டார், திமுக தலைவர் கருணாநிதியும் செயல்படாத நிலையில் இருக்கிறார். எனவே தற்போது தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியோடு பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன், தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ரஜினியால் சிறப்பாக நிரப்ப முடியும் என்று அம்பரீஷ் கூறினார்.

ரஜினி மிகவும் எளிமையானவர், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். பொய், வெளிவேஷம் போட மாட்டார். வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறார். நீண்ட காலமாக, அரசியலுக்கு வருவது குறித்து யோசித்துக் கொண்டிருந்த அவர், என்னிடமும், நடிகர் சிரஞ்சீவியிடமும் கருத்து கேட்டார் என்றார்.

ரஜினியின் அரசியல் வருகை பற்றி பல ஆண்டுகள் பேசி இருக்கிறோம். தற்போது அவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் இப்போதைய சூழ்நிலையில் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர்கள் இல்லை. எனவே வரும் 2021 ஆம் ஆண்டில் நிச்சயம் ரஜினி வெற்றி பெறுவார் என்றும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறினார்.

ரஜினியால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்வார் என்றார். கர்நாடக - தமிழகம் இடையேயான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் நடிகர் அம்பரீஷ் கூறினார்.

click me!