Rajendra balaji : தலைமறைவான ராஜேந்திர பாலாஜி… ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

By Narendran SFirst Published Dec 18, 2021, 7:22 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. அச்சமயம் ராஜேந்திர பாலாஜி சார்பில், இந்த குற்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிடப்பட்டது. கவுன்சிரி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழங்கறிஞர் அசல் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜிக்கு, உதவியாளர் பலராமன் மூலம் தான் பண பரிமாற்றம் நடைபெற்றதாக வாதிட்டார்.

மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும், அவர் தொடர் குற்றவாளி என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராஜேந்திரபாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள் , விசாரணை செய்யுங்கள் ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாமென்று என்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். 

click me!