மத்திய அரசை பார்த்து பயம் எல்லாம் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வலுத்துள்ளன.
விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக சார்பில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல் என தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது. அதேபோல அமைச்சர்கள் தலைமையில், மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்துவருகிறது.
மத்திய அரசைக் கண்டு அஞ்சும் அதிமுக அரசு, காவிரி விவகாரத்தில் சரியான அழுத்தம் கொடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ராஜேந்திர பாலாஜியின் இன்றைய துணிச்சல் பேச்சு:
இந்நிலையில், உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. உண்ணாவிரதம் ஒரு முன்னோட்டம்தான். மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், போராட்டங்கள் தொடரும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜியின் அன்றைய பேச்சு:
அதிமுக அரசை கலைக்க முடியாது; அதெல்லாம் டெல்லியில் இருக்கும் மோடி பார்த்துக்கொள்வார் என கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது துணிந்து பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.