தொடரும் தேர்தல் வன்முறை வெறியாட்டம், பதற்றத்தில் மேற்குவங்கம்...

By sathish kFirst Published May 19, 2019, 3:25 PM IST
Highlights

இதுவரையில் முடிந்துள்ள 6 கட்ட தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் கடைசிகட்ட வாக்குப்பதிவிற்காக   கூடுதல் பாதுகாப்பு வாக்குச்சாவடிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரையில் முடிந்துள்ள 6 கட்ட தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் கடைசிகட்ட வாக்குப்பதிவிற்காக   கூடுதல் பாதுகாப்பு வாக்குச்சாவடிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பையும் மீறி பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜகவினருக்கும், திருணமூல் காங்கிரஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பாத்பரா தொகுதியில் பாஜகவினரும், திருணாமூல் காங்கிரஸாரும் மோதலில் ஈடுபட்டனர். தெற்கு கொல்கத்தா தொகுதியின் பாஜக வேட்பாளரான சிகே.போஸ் திருணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் தனக்கும், தனது தொண்டர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திருணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று பஷிர்ஹத் 189ஆவது வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குச்சாவடியில் 100 பேர் வரை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இஸ்லாம்பூரில் கையெறி குண்டுகளை வீசி வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக மற்றும் திருணமூல் காங்கிரஸ் என இருதரப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் காவல் துறையினர் மிக அதிக அளவில் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

click me!