மாவட்ட அரசியல் வேண்டாம்..! திமுகவில் ராஜகண்ணப்பனுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி!

By Selva KathirFirst Published Feb 25, 2020, 10:39 AM IST
Highlights

மாவட்ட அரசியலில் விருப்பம் இல்லை என்று தெரிவித்த பிறகே ராஜகண்ணப்பனை திமுகவில் இணைக்க ஒப்புக் கொண்டுள்ளார் பெரிய கருப்பன்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தவர் ராஜகண்ணப்பன். அவர் சார்ந்த யாதவர் சமுதாயம் ஒரு காலத்தில் அவர் பின்னால் அணிவகுத்து நின்றது. இதனை சாதகமாக்கி அரசியலில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய ராஜகண்ணப்பன் நேரம் சரியில்லாத காரணத்தினால் தமிழக அரசியலில் சோபிக்க முடியாத ஒரு நபராகவே இருக்க நேரிட்டது. எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுக மாவட்டச் செயலாளராக சிவகங்கையில் கோலோச்சியவர் ராஜகண்ணப்பன். 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் மிக முக்கிய அமைச்சர் பதவியை வகித்தார். மேலும் அதிமுகவின் பொருளாளர் பதவியும் ராஜகண்ணப்பனை தேடி வந்தது. இதற்கு காரணம் ராஜகண்ணப்பனின் தேர்தல் வியுகங்கள் தான். யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட தென்மாவட்டங்களில் முக்கியமான சமுதாயங்களாக திகழ்ந்த நாடார், தேவர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமுதாயங்களில் இவருக்கு இருந்த நெருங்கிய தொடர்புகள். மேலும் தேர்தல் அரசியலில் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து கூட்டணி வியூகங்கள் கூட இவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவால் தென்மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு திறம்பட செயல்பட்டவர். 2000ம் ஆண்டு இவர் அதிமுகவில் இருந்து பிரிந்து மக்கள் தமிழ் தேசம் என்கிற பெயரில் கட்சி துவங்கினார். யாதவர்களுக்கான கட்சி என்று கூறப்பட்டாலும் அப்போது அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் தொண்டர்களுடன் இந்த கட்சியில் ஐக்கியமாகினர். இதற்காக இவர் சென்னையில் நடத்திய மாநாட்டில் சுமார் 25 லட்சம் பேர் திரண்டனர். இதனை பார்த்து தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்தி என்று ராஜகண்ணப்பனை பலரும் கற்பனை செய்தனர். ஆனால் அதன் பிறகு தேர்தல் வியூகத்தில் தோல்வி, நேரம் சரியில்லாமை போன்றவற்றால் கட்சியை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் திமுகவில் இணைந்த அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். பிறகு அதிமுகவில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டார். வெற்றி கை வரை எட்டிய நிலையில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக கூறப்படுவது தனிக்கதை. திறமையானவராக இருந்தாலும் அதிமுகவில் இவரால் முன்னேற முடியாமல் போனதற்கு சசிகலா குடும்பத் தான் காரணம் என்று கூறப்ப்டடது.

இதனால் ஓபிஎஸ்சுடன் இணைந்து ராஜகண்ணப்பன் அரசியல் செய்த நிலையிலும் அங்கும் அவரால் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார் ராஜகண்ணப்பன். தென்மாவட்டங்களில் உள்ள யாதவர் வாக்குகளை சிந்தால் சிதறாமல் திமுகவிற்கு பெற்றத்தருவதாக கூறியே  அவர் திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு பிரதிபலனாக திமுகவில் உயர்மட்ட பதவி, தனக்கு அல்லது தனது மகனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் போன்றவை ராஜகண்ணப்பனின் நிபந்தனைகள். இதனை அடுத்து திமுகவின் தேர்தல் பிரிவில் முக்கிய பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படும் என்கிறார்கள்.

click me!