அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 7 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார்.
இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது.மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சென்னையில் 200 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதிய உயர்வு அளித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் 7 வருடத்திற்கு பிறகு, தற்போது தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.