ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு எதிர் திசையில் பயணிப்பதாக தமிழக எம்.பி எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2020, 12:14 PM IST
Highlights

முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே  சரியாக இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களையே முடக்குவது என்பது எதிர் திசையில் பயணிப்பது ஆகும்.

ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.

ரயில்வே பின்க் புத்தகத்தில் உள்ள 2019-20 வரையில் ஒப்புதல் பெற்று பெருமளவில் பணி துவங்கப்பட திட்டங்கள் 2018-2019, 2019-2020 ஆம் ஆண்டுக்கான வெவ்வேறு இடங்களிலான பணிகளை இணைக்கிற குடை திட்டங்கள் ஆகியன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவா? என்று மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், ஆமாம் இந்த நிதி ஆண்டு இறுதிவரை புதிய திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், பாதுகாப்பு மற்றும் அவசர பணிகள் மட்டும் நிறுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவிக்கையில், ரயில்வே திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வருந்தத்தக்க முடிவு. ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது என்பது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும். இந்தியா மிகப்பெரும் வேலை இழப்பு வேலையின்மை நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே  சரியாக இருக்க முடியும். 

ஆனால் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களையே முடக்குவது என்பது எதிர் திசையில் பயணிப்பது ஆகும். இது ஏழை எளிய குடும்பங்களை இளைஞர்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும், மத்திய அரசு ரிசர்வ்  வங்கியில் கடன் வாங்குவதன் மூலம் எந்த ஒரு திட்டமும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

click me!