Thangamani Raid : ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை… அதிமுகவை அழிக்க முடியாது… தங்கமணி காட்டம்!!

Published : Dec 15, 2021, 09:32 PM IST
Thangamani Raid : ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை… அதிமுகவை அழிக்க முடியாது… தங்கமணி காட்டம்!!

சுருக்கம்

அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானது. இதையடுத்து இன்று அதிகாலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு முன்புற கதவை தாழிட்டு தங்களது விசாரணையை தொடங்கினர்.

பள்ளிபாளையம் மட்டுமின்றி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்டம் -33 , சென்னை -14 , ஈரோடு -8 , சேலம் -4 , கோயம்புத்தூர் -2 , கரூர் -2 , கிருஷ்ணகிரி- 1 , வேலூர் -1 , திருப்பூர் -1 , பெங்களுர் -2 , ஆந்திர மாநிலம் சித்தூர் - 1 உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் 150க்கும் அதிமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த பிரபல கட்டுமான நிறுவனத்திலும் இச்சோதனை நடைபெற்றது. முன்னதாக 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019 சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டது. மேலும் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறினார். மேலும் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள், அது முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல், பிட்காயின் என்னவென்றே எனக்கு தெரியாது. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!