இன்று ராஜினாமா செய்கிறார் ராகுல் !! தேர்தல் தோல்வி எதிரொலி !!

By Selvanayagam PFirst Published May 25, 2019, 8:42 AM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்கமுடியவில்லை.

உத்தரபிரதேசத்தில் நேரு பரம்பரையின் பாரம்பரியமான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் பொது செயலாளர் பதவி அளிக்கப்பட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் சில மாநிலங்களின் தலைவர்கள் தங்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி உள்பட பல முன்னணி தலைவர்கள் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அந்த மாநில தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பார் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பினார்.

இதேபோல் ஒடிசா மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அந்த மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக் அனுப்பி இருக்கிறார். 

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் வகையில் அந்த மாநில பிரசார குழு தலைவர் எச்.கே.பாட்டீல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து மேலும் பல மாநில காங்கிரஸ் தலைவர்களும், பொறுப்பாளர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாநில தலைவர்களின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

click me!