தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் செம எனர்ஜி கிடைக்குது !! ராகுல் காந்தியின் நெகிழ்ச்சி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Apr 12, 2019, 10:35 PM IST
Highlights

தேனியில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம்  தனக்கு ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு கிடைப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார். 

அப்போது  பேசிய அவர்  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, எங்களது தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல். எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் குரல் ஒலிக்கும். மக்களின் விருப்பத்தை உள்வாங்கி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். தமிழக மக்கள் விரும்பாததை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது. 

டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறார். வெறுப்பாலும் கோபத்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியாது. வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். தமிழகமக்களை அவர் தொடர்ந்து அவமதிப்பதை பார்த்து கொண்டு இருக்க முடியாது. தமிழ்மொழியின் தொன்மை அவருக்கு தெரியாது. அதை படித்தாவது அவர் தமிழகத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் நேரடியாக பார்த்தேன். உங்கள் வேதனையிலும் சோதனையிலும் நாங்கள் பங்கேற்போம். அவர்களை நேரில் சென்று தழுவிக்கொண்டேன். விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  சமர்ப்பிப்போம். 

ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும். 

வங்கிகளில் பல கோடிகள் கடனாக வாங்கி திருப்பி செலுத்தாத அனில் அம்பானியை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள மோடியின் அரசு 25 அல்லது 30 ஆயிரம் ரூபாய் கடன் திருப்பி செலுத்தாக விவசாயியை மட்டும் தேடிப்பிடித்து சிறையில் அடைப்பது ஏன்? 

கடனை திருப்பி கொடுக்காத எந்த விவசாயியும் சிறை செல்லும் நிலை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வராது. 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.  ஊராட்சி பணியிடங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவையும் படிப்படியாக நிரப்பப்படும் என்றார்.. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் நான் புத்துணர்வு பெற்றதாக உணர்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு தேவையான புத்துணர்வு எனக்கு கிடைக்கிறது. 

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள பந்தம் இதயப்பூர்வமானது. எனக்கு மகிழ்ச்சியான வரவேற்பை அளித்து எனது பேச்சை கேட்பதற்காக இங்கு திரளாக வந்துள்ள உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

click me!